அபராஜித்தனின் வேலஞ்சேரி செப்பேடு
செப்பேட்டின் அமைப்பு
இந்த செப்பேடு இன்றைய திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள வேலஞ்சேரி எனுமிடத்தில் 1977 ம் ஆண்டு கண்டறியப்பட்டது , மொத்தம் ஐந்து ஏடுகளையும் , இந்த ஏடுகளை இணைக்கும் வளையத்தில் பல்லவர்களின் காளைச்சின்னமும் அதனை சுற்றி பல்லவ அரசன் அபராஜித்தன் மற்ற குல அரசர்களுக்கு விடுக்கும் ஆணை என்று பொறிக்கப்பட்டுள்ளது , வழக்கமான பிற்கால பல்லவர் செப்பேடுகளை போல் இந்த செப்பேடும் வட மொழி மற்றும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது வடமொழிப் பகுதியை பெரிய காவியங்களை எழுக்கூடிய ஶ்ரீகுமரனின் மகன் மகாதேவனும் , பல்லவரின் அரசு சின்னத்தை விடேல் விடுகு பெருங்கண்ணனும் , தமிழ் பகுதியை பொதினி மகாதேவபட்டனும் இந்த செப்பேட்டை காஞ்சியில் பிறந்த சிற்பி விஜயன்னாவும் செதுக்கியுள்ளார் இவர்களின் இந்த பணிக்கு அவர்களுக்கு ஊதியமாய் அளிக்கப்பட்ட நிலத்தின் அளவையும் இந்த செப்பேடு குறிப்பிடுகின்றது
செப்பேட்டின் சிறப்பு:
இந்த செப்பேடு பல்லவர்களின் குல பெருமைகளை கூறிவிட்டு
கம்பவர்மன் பெரும் புகழுடன் பல்லவ வம்சத்தில் தோன்றினான் , தன் தம்பியான நிருபதுங்கவர்மனை வீழ்த்தி அவன் ஆட்சியை கைப்பற்றினான் , கம்பவர்மனுக்கும் , கங்கர் குலத்தை சேர்ந்த விஜாயாவிற்க்கும் பிறந்த மகன்தான் அபராஜித்தவர்மன் என்றும் , அபராஜித்தன் பாண அரசர்களின் யானைகளையும் , சிற்றாறூர் எனுமிடத்தில் சோழர் படையை யானைகளை கொண்டே தோற்கடித்தவன் போன்ற செய்திகள் காணப்படுகின்றன , இதில் முக்கியமானது கம்பவர்மனின் மகன் தான் அபராஜித்தன் என்பதும் அவன் சோழரை தோற்கடித்த செய்தியும் தான்
இத்தகவல் தான் நீண்ட நாட்களாய் நிலவிய பல்லவ மன்னர்களான
கம்பவர்மன் , நிருபதுங்கவர்மன் , அபராஜித்தவர்மன் ஆகிய மூவரின் உறவு முறையை விளக்கியது , மேலும் திருத்தணி முருகன் கோவில் பல்லவர் காலத்திலேயே சிறப்புற்று திகழ்ந்த செய்தியையும் இந்த செப்பேடு மூலம் அறிய இயலுகின்றது
செப்பேட்டின் தகவல்கள்
அபராஜித்தவர்மனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட இந்த செப்பேடு , திருத்தணி நாட்டிலுள்ள குன்றவர்தன கோட்டத்தினை சேர்ந்த புதூர் எனும் கிராமத்தை தானமாக வாமனன் என்பவரின் வேண்டுகோளுக்கினங்க தங்க பாத்திரத்திலிருந்து நீரை வார்த்து அபராஜித்தவர்மன் தானமாக கொடுத்த நிகழ்வையும் , இந்த கிராமத்தை மேலிருஞ்செறு கிராமத்தின் கிராம சபையை சேர்ந்தோர் , தானமளிக்கபட்ட இந்த புதூரை தங்கள் கிராமத்துடன் இணைத்து ஆயிரம் கலம் / காடி அளவுள்ள நெல் சூரியன் , சந்திரன் உள்ளவரை திருத்தணி நாட்டில் மேன்மலை குன்றவர்வர்த்தன கோட்டதில் திருத்தணியில் மலைமீது விருப்பம் கொண்டு மகிழ்வுடன் இருக்கும் சுப்பிரமணியருக்கு வழங்க வேண்டும் என்றும் தானமளிக்கப்பட்ட புதூருக்கு அரசின் வரியிலிருந்து சில விலக்குகளும் கொடுக்கப்பட்டதை இந்த செப்பேடு கூறுகின்றது
தகவல்கள்: பல்லவர் செப்பேடுகள் மு.ராசேந்திரன்
Comments
Post a Comment